Tuesday, February 01, 2005

kalyaanamaam.... kachchEriyaam... Monday ... End day


காலையில் எழுந்த போது நேரம் எட்டு மணிக்கும் மேலாகி விட்டது. பிரயாணக் களைப்பு.. முதல் நாள் தூங்காதது எல்லாம் சேர்த்து வைத்துக் கொண்டு தூங்கி எழுந்தாகி விட்டது. நங்க நல்லூரில் இருந்த குருவாயூரப்பன் கோவிலுக்கும் அனுமன் கோவிலுக்கும் சென்று விட்டு பின்பு மயிலையில் கபாலியை சந்திப்பதாக திட்டம்.

" கோவிலுக்கெல்லாம் கேமரா வேண்டாம்மா " அக்காவின் அன்புக் கட்டளை. கோவிலுக்கு போன பின் எடுத்து வந்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றினாலும் கோவில்களை அதிகம் படம் பிடிக்க வேண்டாம் என்ற முடிவில் உறுதியாகிவிட்டது
***
சில வேண்டுதல்களை குருவாயூரப்பனிடமும் அனுமனிடம் வைத்து விட்டு ஆட்டோ பிடித்து மயிலை செல்ல முடிவெடுத்தோம். அங்கே சென்று பரிசுப் பொருள் வாங்குவதாய் முடிவு செய்திருந்தோம்..
எல்லாரும் பேசுவதாக சொல்லுவது போல் ஆட்டோ ஓட்டுனர்கள் ஒன்றும் கேவலமான தமிழ் பேசவில்லை. சாதாரணமாக தான் இருந்தது. ஆனால் அவர்கள் கேட்ட தொகை தான் மயக்கம் போட்டு விழுமளவிற்கு கொண்டு சென்றது. பெங்களூரில் ஐம்பது ரூபாய் செலவில் செல்லக் கூடிய தொலைவிற்கு சென்னையில் நாங்கள் கொடுத்தது நூறு ரூபாய்க்கும் மேல்.
****
மயிலையில் திருவாளர் கபாலியையும் அவரது துணைவியார் கற்பகத்தையும் பார்த்து கொஞ்சம் நேரம் என்னென்னவோ கேள்விகள் மற்றும் கோரிக்கைகள் வைத்து விட்டு பின்பு பிரகாரத்தில் அமர்ந்து கண் மூடி உட்கார்ந்தால்.... என்னமோ இருக்குதுங்க அந்த இடத்துல ... அங்கு வரும் அத்தனை பேரின் ஓசையையும் மனம் உள்வாங்காது மெது மெதுவாக வேறெங்கோ பயணிக்க துவங்க... அதற்குள் எழுப்ப பட்டேன். வெளியே கிரி டிரேடிங் சென்று அங்கே சில புத்தகங்கள் வாங்கிக் கொண்டு எங்கே பரிசுப் பொருள் வாங்குவது என்று தெரியாமல் சிலரிடம் விசாரித்ததில் இராஜா அண்ணாமலைபுரத்தை சொன்னார்கள். அங்கு சென்று எங்கு வாங்குவதென்று தெரியாமல் மறுபடி அங்கிருந்தவர்களை கேட்டால்... மயிலைக்கே திரும்பச் சொன்னார்கள்...
" சென்றவனைக் கேட்டால் வந்து விடு என்பான்...
வந்தவனைக் கேட்டால் சென்றுவிடு என்பான்... "
****
கிட்ட தட்ட ஒரு மணி நேரம் தேடியலைந்ததில் கிடைத்த தகவல் ராசி ஆர்ட் கேலரியில் கிடைத்தாலும் கிடைக்கலாம்.. எப்படித்தான் சென்னையில் அந்த வெய்யிலில் நடக்கிறார்களோ... நாக்கு வெளித்தள்ளிவிடும் போல் இருந்தது. சமாளித்துக் கொண்டு சென்று தேட ஆரம்பித்தோம். நாங்கள் தேடியவை கிடைக்கவில்லை. அந்த நேரம் பக்கத்தில் ஒரு பெண்மனி ராசி சில்க்ஸில் கிடைக்கும் அங்கே போய் பாருங்கள் என்றார். அங்கே போனால் கேவலமாக ஒரு அடிக்கு ஒரு அடி தபால்களை போட்டுவைக்கும் பையை அவர் சொன்னார் என்று புரிந்தது. பின்பு திரும்ப வந்து ஆர்ட் கேலரியில் ஒருவழியாக தேர்வு செய்து அதை பேக் செய்ய சொன்னபோது தான் சிக்கல் தொடங்கியது. சரியான அளவு அட்டைப் பெட்டி கிடைக்காமல் போக பின்பு தேடிக் கண்டுபிடித்து கொண்டு வந்து ஒருவழியாக வண்ணக் காகிதம் ஒட்டிய பின் இன்னொரு பிரச்சினை பூதாகரமாக எழுந்தது. இவ்வளவு பெரியதை எப்படி கொண்டு செல்வது. ?? சென்னையில் ஆட்டோ வைத்திருந்தால் நன்றாக சம்பாதிக்கலாம் போல..
******
மறுபடி கிருக்கை தொடர்புக் கொள்ள முயற்சித்து நேரவிரயம் செய்துக் கொண்டே இருந்தேன்.
"" பலனொன்றும் இல்லை சைதாப்பேட்டைக்கண்ணா பலனொன்றும் இல்லைக் கண்ணா.... ""
மறுபடி நங்கநல்லூர் சென்று சற்றே இளைப்பாறி விட்டு ஐந்து மணியளவில் சத்திரம் நோக்கி கிளம்பினோம். ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. சற்றே அதிக தொலைவு செல்லும் போது கால் டாக்சி தான் சிக்கனமான வழி. ராஜா வந்த பின்னால் ஆட்டோ சார்ஜ் எல்லாவற்றிற்கும் வட்டி போட்டு காசு வாங்கிவிட வேண்டும். இடம் கண்டு பிடித்து சத்திரத்தை சேர்ந்த பொழுது மணி சரியாக ஆறு.
உள்ளே நுழையும்போது இருவர் வெளியேறிச்செல்ல முயற்சித்துக் கொண்டு இருந்தார்கள். ஆர்த்தியும் நிர்மலாவும்.
" யாருமே வரலைன்னு இப்ப தான் வீட்டுக்கு போகலாம்னு இருந்தேன். "

****
முதன் முதலில் சத்திரத்தை சென்றடைந்த பெருமை எங்கள் நால்வருக்கு தான் சேரும். அதற்கப்புறம் ஒருவர் மிக அமைதியாக யாருமற்ற நாற்காலிகளை வெறித்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.
" ஹலோ நீங்க ஐகாரஸ் பிரகாஸ் தானே "

என்னமோ தூக்கி வாரிப் போட்டது போல் " ஆமா நாந்தான் நீங்க யாரு " என பதில் வந்தது. சிறிது நேரத்தில் வயிறு கலக்க ஆரம்பித்தது. பின்னே இருக்காதா... பா.ரா, பத்ரி, ரொம்ப நாளாக பார்க்க வேண்டும் என்று இருந்த ரஜினி ராம்கி, ராஜ தியாகராஜன், சுரேஷ் கண்ணன், சுவடு சங்கர்.. பிரசன்னா என நிறைய பேர் ( எல்லாருடைய பேரையும் குறிப்பிட வில்லை... ) என ஒவ்வொருத்தராக வர ஆரம்பிக்க.. அவர்களுக்கு முன்னால் என்னை என்னவென்று சொல்லி அறிமுகப் படுத்திக் கொள்வது ??.
ஆனாலும் ஒரு பந்தாவும் இல்லாமல் அனைவருமே பழகினார்கள். இடையிடையில் ஆர்கெஸ்ட்ரா எங்கள் பொறுமையை சோதிக்க சப்தம் எழுப்பிக் கொண்டே இருந்தாலும் பொறுமைக்கு இலக்கணமாய் நாங்கள் இருந்து வெற்றிப் பெற்றோம்.
அப்போதும் நப்பாசையுடன் கிருக்கை தொடர்புக் கொள்ள முயற்சித்து தோல்வியை தழுவியது தான் மிச்சம்.
*******

மாப்பிள்ளை டோய் மாப்பிள்ளை டோய்.. மணியான மகராசன் மாப்பிள்ளை டோய்... பாடாத குறைதான். வெளியே வந்த ராசா ஒவ்வொருத்தரிடமும் சென்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ள ஆரம்பித்தான். அதற்ற்குள் பத்துமுறையாவது உஷா மாமி எங்கே மரவண்டூ என கேட்க ஆரம்பித்தார். மரவண்டூ வந்த பின்னால் என்ன மரவண்டூ பேசவே மாட்டேங்குதே என விடை பெறும் வரையில் புலம்பிக் கொண்டே இருந்தார்.

பிரசன்னாவை ராஜா அழைத்து உங்கள் ரசிகர் மன்றம் இங்கே இருக்கிறது பிரபாக்காவை சொன்னது நகைச்சுவை என்றால் உஷா " ஆமா ... பிரபா யார் எழுதுனாலும் நல்லா இருக்குன்னு சொல்லிடுவாங்க " என்றது தான் நகைச்சுவையின் உச்சம
்********
மதுமிதா வந்த உடன் யார் யாரென்று விசாரித்துக் கொண்டு இருந்த போதில் நீங்கள் தானே மதுமிதா என்று அடையாளம் கண்டுக் கொண்டது முதலில் நான் தான் என்றாலும் அவர்கள் பேசிக் கொண்டு இருந்ததெல்லாம் மற்றவர்களிடம் தான். பெரிய எழுத்தாளர் அவரைப் போல பெரிய எழுத்தாளர்களிடம் தான் பேசுவார் போல என்று சமாதானப் படுத்திக் கொண்டேன். பின்னர் தான் தெரிந்தது மிகவும் கூச்ச சுபாவம் என்று.

*********
மணமக்கள் ஜோடியாக மேடையில் நிற்க ஒவ்வொருத்தராக போகவேண்டியிருந்தது. சொந்தங்கள் அவசர அவசரமாக மேடையேறினார்கள். எங்களுக்கு நேரமாகவே ஒரு நான்கைந்து முறை மேடைமேல் ஏறியும் பலர் இடம் தராததால் இறங்கி கடைசியாக வெற்றிப் பெற்றோம்.
இடமிருந்து வலம் : அப்துல் ஜப்பார், ரஜினி ராம்கி, சித்திரன், சுரேஷ் கண்ணன், சிபி வெங்கடேஷ்,பாரா, பத்ரி + மணமக்கள்

எல்லோரும் நாங்கள் கையில் வைத்திருந்த பெட்டியைப் பார்த்து கிண்டலடிக்க ஆரம்பித்தார்கள். இதென்ன வெறும் காலிப் பெட்டி தானே. அதன் உள்ளே வெறுமனே சின்னதாக சாக்லெட் வைத்திருக்கிறீர்களா என்று..... ஹ்ம்ம்ம்ம் நல்லதுக்கு காலமில்லை ;)

லேட்டாக வந்து யாரிடமும் அதிகம் பேசாமல் சாப்பிட போய்விட்டார் கிச்சு. ட்ரெயினுக்கு நேரமாகிவிட்டது எங்கே வண்டை காணவில்லை என்றால் அது பெரிய எழுத்தாளர்களுடன் இலக்கியம் பற்றி விவாதிக்க சென்று விட்டது. ஒருவழியாக கிடைத்தவர்களை பிடித்து உட்காரவைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு சாப்பிடப் போனோம்.
*******
நல்ல சாப்பாடு ஆனால் சாப்பிட தான் நேரம் இல்லை. அடித்து பிடித்து சாப்பிட்டு கிளம்பினோம்.
மொத்தத்தில் இராஜாவின் திருமணவரவேற்பு விழா பலரை அறிந்துக் கொள்ள உதவியது. என்னிடம் கட்டுரைகளை பெற்று பிரசுரிக்க அண்ணாக் கண்ணனிடம் பரிந்துரைத்த பா.ராவிற்கு என் நன்றியை தெரிவித்துக் கொண்டு ஆசீப் மீரானின் தந்தையார் எங்கள் அனைவரையும் லிப்ட் வரை வந்து வழியனுப்ப அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டும் கிளம்பினோம்.
பாலராஜன் தான் வந்த காரையே எங்களை நிலையம் வரை போக அனுமதித்தார். அவருக்கு நன்றிகள் பல. தி.நகரில் வீடு என்பதால் வரும்போது அங்கே இறங்கிக் கொள்கிறேன் என்று மதுமிதாவும் எங்களுடன் வந்தார். காரில் ஏறும் வரை அவருக்கு பிரச்சினை இல்லை. காரில் ஏறிய பின்பு தான் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரைத் துளைத்து விட்டோம். பொறுமையாக பதிலளித்துக் கொண்டு வந்தார். ( பாவம் வேறுவழியில்லை :P )
****
மதுமிதாவுடனான பேட்டி மற்றும் புகைவண்டியில் வண்டார் உதிர்த்த பொன்மொழிகள் இன்னும் பிறவற்றை யார் எழுதப் போறீங்க.. ?? ( அப்பா இதுக்கே எனக்கு மூச்சு வாங்குது... இப்பத்தைக்கு எழுத முடியாதுப்போய் )
*********

6 comments:

Anonymous said...

ஐயப்பு...இது..இது..இதத்தான் எதிர்பார்த்தேன். நல்லா விவரமா எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.
(எனக்கும் சேத்து சாப்பிட்டு வரச்சொன்னேனே... சாப்பிட்டீங்களா?)

posted by: மூர்த்தி

Anonymous said...

அடேடே ராஜா அவர்கள் திருமணமா? நான் வருவதற்கு மிகுந்த ஆவலுடன் இருந்தேன். இருந்தாலும் திடீரென்று ஏற்பட்டத் தடையால் வர முடியாது போயிற்று. உங்கள் வர்ணனைகள் நன்றாக உள்ளன. அதைப் பார்த்துத் திருப்திப் பட்டுக்கொள்வதை விட வேறு வழியில்லை எனக்கு.
இன்னொன்று. இப்போதையச் சென்னையில் கால் டாக்ஸிகள்தான் சௌகரியம். அதை விட 5 மணி 30 கிலோமீட்டர் என்றக் கணக்கில் டூரிஸ்ட் டாக்ஸி எடுத்துக் கொள்ளலாம். ரூ.310 தான். பிறகு 30-க்கு மேல் ஒவ்வொரு கிலோமீட்டரும் ரூ.4.50 மற்றும் 5 மணிக்கு மேல் ஒவ்வொரு மணிக்கும் ரூ.35 கொடுக்க வேண்டும்.

சிங்கிள் ட்ரிப்புக்குக் கால் டாக்ஸி, வீடு சீக்கிரம் திரும்பும் பட்சத்தில் டூரிஸ்ட் டாக்ஸி என்று வைத்துக் கொண்டால் பிரச்சினை தீர்ந்தது.

அட்டோக்கரர்கள் அராஜகம் அப்படி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

posted by: Dondu

Anonymous said...

photos onnume theriyamaattenguthe. Ean?

posted by: Anonymous

Anonymous said...

ஸ்வாமியே!

நீண்ட குழாய் கொண்ட படக்கருவி என் முகத்தருகில் கிளிக்கிய நினைவு இருக்கிறது.

அது எங்கே! :)

மறைத்தீரே என்னை - அதன் விளைவைப் பாருங்கள் மேலே!

எல்லா படங்களையும் எனக்கு அனுப்புங்கள். என் சைட்டில் போடுகிறேன். (எல்லாப் புகழும் உங்களுக்கே என்று மறக்காமல் எழுதி விடுகிறேன். கவலை வேண்டாம்!)

எஸ்.கே

posted by:

Anonymous said...

படம் எல்லாம் எங்கீங்க...

We are sorry to say....Over Bandwidth ...blah..blah...

is the message seen in every photo..

Check pannunga...

posted by: Anonymous

Anonymous said...

மக்களே... கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் .. முடிந்த வரையில் சரி செய்து விடுகிறேன்.

posted by: iyappan