Monday, November 24, 2003

கர்ணன் பேசுகிறேன்
----------------------

மாதவன் தந்த வரத்தால்
ஆதவனை அழைத்தாய்
சூதறியா நாளில்.. இந்தப்
பாதகனை படைத்தாய்

சொல் தாயே
பெற்றதன் பாவம் ஆற்றில்
விட்டதும் போகும் என்று
சொன்னது யார்

அன்பை காணும் வகையற்று
பண்பில் வாழும் நிலைவிட்டு
ஆற்றில் மனம் ஆறும் என்றா
என்னை துரத்தி வைத்தாய்

சொல் தாயே
உணர்ச்சிகள் மறைத்து வாழ்ந்தால்
உலகம் உய்யும் என்று
சொன்னது யார்

கனவுகளில் உனைத் தேடி
நினைவுகளில் நிதம் எனைத் தேடி
தொலைந்த மனமும் கலைந்த கனவும்
என் வாழ்வின் அடையாளம் என்றாய்

சொல் தாயே
இருக்கும் நேரம் மறந்தாய்
இறக்கும் நேரமேனும்
அடையாளம் தர வருவாயா
-----------

ஐயப்பன்

No comments: